கார்த்திகை விரதத்தால் 2 அரசர்களின் வாழ்வு மலர்ந்தது…. தேவியின் தோஷமே நீங்கியது!!

கார்த்திகை விரதம் என்றால் அன்றைய தினம் வீட்டில் பச்சரிசி மாவில் கொழுக்கட்டையும், விளக்கும் செய்து வீடுகளில் ஏற்றி வழிபடுவர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவர். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏறியதும் வீடுதோறும் விளக்கேற்றுவர்.

அவ்வளவு தான் நமக்குத் தெரியும். அதை நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் டிசம்பர் 6 திருக்கார்த்திகை வருகிறது. தவறவிடாதீர்கள். இன்னும் இந்த நாளில் என்னவெல்லாம் சிறப்புகள் என்று பார்க்கலாமா…

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம் அக்னி பகவான். சூரியன் அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மகா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

deepam1
deepam1

நன்மையோ நன்மை…

கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குடியேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் விளக்கேற்றி வழிபட எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வை துளிகளை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரக பதவி அளித்தார்.

கிரக பதவி பெற்ற அங்காரகன்

கிரக பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். எனவேதான் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது.

பேரரசன் ஆன திரிசங்கு

ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள் என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான்.

இழந்த நாட்டைப் பெற்ற பகீரதன்

பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான் என புராண கதைகள் கூறுகின்றன. எனவே கார்த்திகை தீபம் எத்தனை நாட்கள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

பரணி தீபம்

பரணி காளிக்கு உரிய நாள். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். அன்று மாலை விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.

மகா தீபம்

Maha deepam
Maha deepam

கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும்.

இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விளக்கேற்றிய பின்னர் அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

மகாலட்சுமியின் அருள்

3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் விஷ்ணுவின் அருளும், அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

5ஆம் நாள் தீபம்

5ம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது, கிராமங்களில் உள்ள பலவகை தெய்வங்களுக்கான வழிபாடாகும். தீபத்திருவிழாவை இன்று தொடங்கி 5 நாட்கள் விளக்கேற்றி வழிபட நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews