வருகிறது…. தமிழ் புத்தாண்டு…! ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்க இதை மறக்காம செய்யுங்க..!!

தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கொண்டாடும் திருநாள் தைத்திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு. இவற்றில் எது தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சிலருக்குக் குழப்பம் வரலாம். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என நாம் காலம் காலமாகக் கொண்டாடி வருகிறோம். அதனால் அன்றைய நாளையே நாம் தமிழ்ப்புத்தாண்டாகக் கொள்வோம்.

ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு வருகிறது. இது வரும் வெள்ளிக்கிழமை அன்று நடக்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமான திருவோணம் அன்று வருகிறது. பெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் சித்திரைக்கனி அன்று இருக்கலாம். சித்திரை மாதம் முதல் நாள் தான் சித்திரைக்கனி. பொதுவாக அன்றைய தினம் காலை எழுந்ததும் நல்ல ஆண்டாக அமையணும்னு கடவுளை வேண்டிக்கொள்ள வேண்டும்.

தமிழ் வருடப்பிறப்பு அன்று கனிகாணுதல் என்ற நிகழ்ச்சியை வீட்டிலேயே நடத்துவாங்க. அது எப்படின்னு பார்ப்போம்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்ததும, குடும்பத்தில் உள்ள பெண்கள் பூஜைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கண்ணாடியில் கனிகளைக் காண வைப்பது கனிகாணுதல். கண்ணாடியில் கனிகளைக் கண்டால் இந்த ஆண்டு முழுவதுமே கனிகளைப் போல இனிப்பான ஆண்டாக அமையும் என்பது நம்பிக்கை.

முதல் நாள் இரவே பூஜை அறையை சுத்தம் செய்து கண்ணாடியை அங்கு வைங்க. பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைங்க. தூங்கி எழுந்ததும் இந்த பூஜையை சுலபமா செய்யலாம். கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிச்சி வைங்க.

Sithirai kani
Sithirai kani

பின்னால் அதன் முன் பெரிய தாம்பூலத்தட்டை வைத்து கனிகளை வைங்க. அதில் முக்கனிகள் கட்டாயமாக இடம்பெறணும். மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என பழங்கள் இருக்க வேண்டும். அவற்றை அழகா அடுக்கி வைங்க.

நவதானியங்களாக அரிசி, துவரம்பருப்பு, கல் உப்பு, வெல்லம் ஆகியவற்றை தலைதட்டாமல் சிறுசிறு கிண்ணங்களில் வைங்க. மங்கலப்பொருள்களான வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றை வைங்க. அதனுடன் மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் வைங்க. ஒரு கிண்ணத்தில் சில்லரை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைங்க. தங்கக்காசு, நகைகள் மற்றும் வெள்ளி நாணயங்களை வைப்பது சிறப்பு. அன்னபூரணி சிலை வைத்துள்ளவர்கள் அரிசியால் அலங்காரம் செய்யுங்க.

பின்னர் ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தை அலங்கரித்து அதில் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி உதிரிப்பூக்களைத் தூவி வைங்க. அதோடு கொஞ்சம் பச்சைக்கற்பூரம், ஏலக்காயை சேருங்க. இந்த எல்லாப்பொருள்களும் அந்தக் கண்ணாடியில தெரியணும். வெள்ளிக்கிழமை அதிகாலை வேறு எதையும் பார்க்காமல் முதலில் கண்ணாடியில் தெரியும் பழவகைகளையும், நகைகளையும் பார்க்கணும்.

flowers in water
flowers in water

குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் பெண் அந்தக் கண்ணாடியை முதலில் தரிசனம் செய்யணும். அதன்பிறகு தான் ஒவ்வொருவராக அந்தக் கண்ணாடியைப் பார்க்கணும். குளித்து முடித்ததும் நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பருப்புப் பாயசம் வைக்கலாம்.

அனைவரும் கனிகளைக் கண்ட பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு தூப, தீப, கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தையும் அன்றைய தினம் மறக்காமல் வணங்குங்க. அனைவரும் பிரசாதமாக நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு இந்த ஆண்டு வறுமை இல்லாமல் உலகமக்கள் செழிப்புடன் வாழணும்னு வேண்டிக்கோங்க.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.