கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதி யில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜீலை மாதம், 13ஆம் தேதி தரைத்தளத்தில் இறந்துகிடந்தார்.
மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் தொடர்பில் ஜீலை 17ஆம் தேதி நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. இதில், பள்ளி, காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது குறித்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு காவல்துறை விசாரித்து வருகின்றது.
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து யூடிப்பர்கள் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜர்
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 25-க்கும் மேற்பட்ட யூடிப்பர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் படி சம்மன் அனுப்பியதன் பெயரில் சம்பந்தப்பட்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல், சென்னை பகுதியை சேர்ந்த முகம்மது ஷபி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்