சிறார் பருவத்தில் இனகவர்ச்சிக்காக செய்யும் தவறுகளுக்கு அவர்களை தண்டிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. 17 வயது சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தொடரப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளது.
இவ்வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து அச்சிறுவனின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்தபோது மைனர் என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறினார்.
இதனிடையே சிறார் நீதி சட்டப்படி உரிய காலக்கெடுவில் முறையாக விசாரிக்கவிலை என்றும் சிறுவனின் வாக்குமூலம் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டதாக கூறி சிறுவன் மீதான தண்டனையை ரத்து செய்தார்.
சிறார் பருவத்தில் இனகவர்ச்சிக்காக செய்யும் தவறுகளை தண்டிப்பது சிறுவனின் நலனுக்கு உகந்தது அல்ல என்றும் காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு காலக்கட்டத்தில் பெற்றோர்களிடம் நெருக்கம் குறைந்து டி.வி, மொபைல் போன்களில் குழந்தைகள் மூழ்கி அவர்களுடைய மனது கெட்டிருப்பது மிக மனவேதனை அளிப்பதாக கூறினார்.