ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

ஜீவசமாதி

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக இருப்பவர்கள் சித்தர்கள், மகான்கள், ரிஷிகள் மற்றும் துறவிகள் ஆவார்கள். இவர்கள் இறைவனது ஆணையின்படி நமது பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்களுடைய இறைத்தொண்டு நிறைவடைந்த பிறகு நமது கர்ம பூமியிலேயே ஜீவசமாதி ஆகிவிடுகிறார்கள்.

நமது நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி மகான்கள் ஜீவ சமாதி ஆகி தவம் செய்து வருகிறார்கள் என்று ஒரு ஆன்மீக மதிப்பீடு தெரிவிக்கின்றது. நமது அண்டை நாடான இலங்கை மற்றும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இது போன்று ஜீவசமாதிகள் உண்டு.

தமிழ்நாட்டில் மட்டும் குறைந்தபட்சம் 10 லட்சம் மகான்கள் வெவ்வேறு காலகட்டத்தில் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். அதிகபட்சமாக 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி ஆன ஒரு சில மகான்களும் நம்முடைய தமிழ்நாட்டில் உண்டு. துன்பங்கள் நிரம்பிய கலியுகம் தொடங்கி 5123 ஆண்டுகள் தான் ஆகின்றன.

இவர்கள் அனைவரும் கலியுகம் முடியும் வரை ஜீவசமாதிகள் தவம் செய்துகொண்டு அருளாற்றலைப் பரப்பிக் கொண்டு இருப்பார்கள். கோயில் நகரங்கள் என்று சொல்லக்கூடிய ஊர்கள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் வெவ்வேறு காலகட்டத்தில் ஐக்கியமாகி உள்ளார்கள் .

இவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை அன்று அரூபமாக வெளிப்படுவது வழக்கம்.

அகத்தியர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்கு உள்பகுதியில் மற்றும் திருவனந்தபுரம் கோவிலிலும் ஜீவ சமாதி ஆகி உள்ளார். போகர் பழனி மலையில் ஜீவ சமாதி ஆகி உள்ளார். ரோமரிஷி எறும்பீஸ்வரர் திருக்கோயில் உள்ள மலைப்பகுதியில் ஜீவ சமாதி ஆகி உள்ளார். கோரக்கர் நாகப்பட்டினம் அருகில் உள்ள வடக்கு பொய்கை நல்லூர் என்ற ஊரிலும் வட மாநில ஊரான கோரக்பூர் என்ற ஊரிலும் ஐக்கியமாகி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஜீவசமாதி உள்ள சில ஊர்கள்

சென்னை, பர்வதமலை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம் ,கும்பகோணம், பாண்டிச்சேரி, சிதம்பரம், பெரம்பூர், காஞ்சிபுரம், மதுரை, தர்மபுரி, தேனி, ராஜபாளையம், திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி மற்றும் பல்வேறு ஊர்களில் குறைந்தபட்சம் 50 மகான்கள் அல்லது ரிஷிகள் ஐக்கியமாகி உள்ளார்கள்.

ஜோதிடப்படி செவ்வாய் கிரகம் ஒரு ராசியை கடப்பதற்கு 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும். விருச்சிக ராசியை அவர் கடக்கும்போது கேட்டை நட்சத்திரத்தை கடப்பதற்கு 12 முதல் 14 நாட்கள் ஆகும். அப்போது வரும் செவ்வாய்க்கிழமைகளில் உலகம் முழுவதும் உள்ள ஜீவசமாதிகளில் தவம் செய்து வரும் மகான்கள் ரிஷிகள் அனைவரும் அரூபமாக வெளிப்படுவார்கள்.

அந்த நாட்களில் அந்தந்த ஊர் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் மற்றும் அந்த மகான்கள் அல்லது ரிஷிகளை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் அன்னதானம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலமாக அனைவரது நீண்டகால துயரங்களும் தீர்ந்துவிடும். வசதியிருந்தால் ஆறுவகையான அன்னங்கள் படைத்து முறைப்படி பூஜை செய்து அன்னதானம் செய்வது நன்று.

கோயில்களுக்கு சென்று நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்யும்போது அது வரமாக மாறுவதற்கு ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் குருவின் அம்சமாகவே இருக்கும் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள், துறவிகள் போன்றவர்கள் ஐக்கியமாகி இருக்கும் ஜீவசமாதிகளில் இந்த குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமைகளில் பிரார்த்தனை செய்யும்போது அது உடனடி வரமாக மாறும். பல ஆன்மீக அன்பர்களுக்கு இது அனுபவத்தில் கிடைத்த உண்மையாகும்.

4.1.2022 செவ்வாய்க் கிழமை, 11.1.2022 செவ்வாய்க் கிழமை இந்த அபூர்வ வாய்ப்பை பயன்படுத்தி ஆன்மீக அன்பர்கள் குருமார்களின் அருளைப் பெற்று நீடூழி வாழ்க என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் படியுங்கள்:

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews