தமிழக அரசியலில் பிசியாக கவனம் செலுத்தி வரும் கேப்டன் விஜயகாந்த் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் டாப் நாயகனாக வலம் வந்தவர். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே வசூலை வாரி குவித்தது. இவரின் கால்ஷீட் கிடைக்காதா என காத்திருந்த இயக்குனர்களும் உள்ளனர்.
இவர் நடிப்பில் இறுதியாக விருதகிரி படம் வெளியானது. அதன் பின்னர் உடல் நல பிரச்சனை மற்றும் தீவிர அரசியல் காரணமாக விஜயகாந்த் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். முழுநேர அரசியலில் களமிறங்கி தேர்தல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், இதன் மூலம் அவர் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
அதுமட்டுமின்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஜயகாந்த் வீட்டிலேயே படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டனை திரையில் பார்க்க போகிறோம் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்த செய்தியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, “விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது. இப்போதைக்கு கட்சி பணியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை எதிர்காலத்தில் அவர் நடிப்பதாக இருந்தால் அதுகுறித்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிடுவோம்” என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.