கொரோனாவின் பரவலானது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது.
குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதோடு வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த கடைகளுக்கு முன் வைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய உத்தரவை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.