மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மியை தடுக்க சட்டம் இயற்றியும் அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ரம்மி தொடர்பாக சினிமா நடிகர் ராஜ்கிரண் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறி, போதை போன்ற மயக்கம் தொட்டவரை விடவே விடாது எனவும் இதற்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஒரு படம் எடுத்ததாகவும், அந்த காலத்தில் காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடும் என்ற பயம் இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு மத்தியில் “ஆன்லைன் ரம்மி” என்ற பெயரில் காவல்கள் மீது பயமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 37 உயிர்கள் பலியாகி அவர்களது குடும்பங்கள் பரிதவித்து கிடக்கிறது. இந்த சூழலில் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றியும் இதுவரையில் செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.