பெங்களூரில் வரலாறு காணாத மழை.. சுரங்கப்பாதையில் கார் சிக்கியதால் இளம்பெண் பலி..!

பெங்களூரில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் அந்நகர மக்கள் கடும் சிக்கலில் இருப்பதாகவும் சுரங்கப்பாதையில் இளம் பெண் சென்ற கார் மூழ்கி  அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத மழை பெய்ததை அடுத்து பெங்களூரின் பல முக்கிய பகுதிகள் மழை நீரில் மூழ்கியது. ஆலங்கட்டி மழை உட்பட கனமழை பெய்ததால் பெங்களூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூர் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடும் சிக்கலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இளம்பெண் ஒருவர் குடும்பத்தினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் திடீரென சுரங்கப்பாதையில் சிக்கியது இதனை அடுத்து அந்த கார் நீரில் மூழ்கியதை அடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். 22 வயதான பானு ரேகா என்ற அந்த பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த காரில் இருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவின் விஜயவாடா என்ற பகுதியைச் சேர்ந்த பானுரேகாவின்  குடும்பத்தினர் விடுமுறையை கொண்டாட பெங்களூர் வந்த நிலையில் இந்த சோக நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பானுரேகா பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து காரை மீட்ட நிலையில் காரில் இருந்த பானு ரேகா மற்றும் உயிரிழந்தார் என்பதும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களது நிலைமை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளம்பெண் பலியான இடத்தை உடனடியாக முதல்வர் சித்தராமையா பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பானு ரேகா குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பெங்களூரை சுற்றி பார்க்க வாடகை கார் எடுத்து அவர்கள் முக்கிய இடங்களை பார்த்துக் கொண்டிருந்த போது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவித்து உள்ளது.   இந்த நிலையில் உயிரிழந்த பானுரேகா குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews