மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய அசானி புயல் இன்று காலையில் புயலாக வலுவிழந்து ஆந்திராவில் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வருகின்ற 15- ஆம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அசானி புயலின் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 15-ம் தேதி வரைக்கும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.