சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18 வது வருடம் செல்லும் போது இருமுடியுடன் தென்னங்கன்றை எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மீக பழக்கம்.

அது என்ன தென்னங்கன்று தான் எடுத்துச் செல்ல வேண்டுமா? மற்ற செடிகளை எடுத்துச் செல்லக்கூடாதா? நமது முன்னோர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதில் சில அர்த்தங்கள் இருக்கும். தென்னங்கன்றை மலைகளில் நட்டு வைக்கும் போது அது வளர்ந்து பெரிய மரமான பிறகு அதில் கிடைக்கும் பொருட்களின் பயன் மிகவும் சிறப்பானது.

குறிப்பாக தென்னை மரத்தில், இளநீர், தேங்காய்,கொப்பரை, சிரட்டை (கொட்டாங்குச்சி), தென்னை ஓலை, மரம்,தேங்காய் நார், தென்னங்குருத்து, (தென்னம் பூ) இவ்வளவு பொருட்கள் கிடைக்கிறது.

Sabarimala Iyappan
Sabarimala Iyappan

சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்ய தூய பசு நெய்யை மூன்று கண்கள் கொண்ட ஆன்மீக பொருள் தேங்காயில் எடுத்துச் செல்கிறோம். இந்த முக்கியத்துவம் வேறு பொருளுக்கு கிடையாது. இப்படி தான் தென்னங்கன்றும் முக்கியதுவமாகிறது.

சபரிமலைக்குத் தொடர்ந்து 18 வது முறையாக செல்லும் சுவாமிமார்கள் இருமுடி கட்டும் மூன்று நாட்களுக்கு முன் இவ்வாறு செய்கின்றனர். நல்ல ஒரு சின்ன தென்னங்கன்றை நல்லநேரத்தில் வாங்கி வந்து அதை நாம் பூஜை செய்யும் சுவாமி படத்தின் அருகில், ஒரு தாம்பாள தட்டு ஒன்றில் ஆற்று மணல் பரப்பி அதன் நடுவே தென்னங்கன்றை வைத்து சிறிது தூய நீரை தெளித்து விடவேண்டும்.

அடிப்பகுதியான தேங்காயில் மூன்று பக்கமும் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும். நாம் சுவாமிக்கு பூஜை முடிந்தவுடன் ஆரத்தி காண்பிக்கும் போது தென்னங்கன்றுக்கும் ஆரத்தி காண்பித்து பக்தியோடு வணங்க வேண்டும்.

இருமுடி கட்டும் போது, முதலில் பூஜை அறையில் உள்ள தென்னங்கன்றை இருமுடி கட்டும் இடத்தில் ஐயப்ப சுவாமிகள் படத்தின் அருகே வைத்து பிறகு இருமுடி கட்ட வேண்டும். கட்டி முடித்தவுடன் தென்னங்கன்றை தோளில் மாட்டகூடிய சிறிய அளவில் உள்ள பையில் தேங்காய் மறைந்து செடி வெளியில் தெரியும் படி வைத்து சபரிமலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

கூடவே பாட்டிகள் வைத்திருக்கும் சுருக்குபையில் விபூதியை எடுத்துச் செல்லவேண்டும். ஏனென்றால் 18 வது சபரிமலை பயணம் புனிதமானது.

Sabarimala coconut tree
Sabarimala coconut tree

அதிலும் தென்னங்கன்றை பார்த்தவுடன் இவர் 18வது ஆண்டுகளாக வரும் குருசாமி என்று எண்ணி சுவாமிமார்கள் நம்மிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். நாம் ஆசிர்வாதம் செய்து வெறும் கையோடு அனுப்பாமல் அவர்களுக்கு சிறிது விபூதியை அளித்தால், முடிந்தால், நெற்றியில் பூசி விடலாம்.

தென்னங்கன்றை முன்பெல்லாம் சபரிமலையில் சன்னிதானம் அருகே நட்டு வைத்தார்கள். தற்போது அங்கு நடுவதில்லை மாறாக இப்போது அதை மொத்தமாக எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் நட்டு வைக்கிறார்கள். ஆகவே முடிந்தவரை சன்னிதானம் பின்புறம் உள்ள பஸ்மகுளத்தின் அருகே வைத்து விட வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews