அவ்வளவு அலட்சியமா?… 2 இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

விபத்து வழக்கில் தொடர்ந்து ஆஜராகாத இரண்டு இன்ஸ்பெக்டர்கள், ஒரு டி.எஸ்.பி.க்கு கோபி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கோபி அருகே உள்ள தொட்டாபாளையத்தில் கடந்த 2016ம் ஆண்டு சரக்கு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கீழ்வாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(19) எனபவர் உயிரிழந்தார்.

அதே போன்று கடந்த 2016ம் ஆண்டு ஓலப்பாளையம் பிரிவில் மகள் ஜூலி சமாதானத்தை கல்லூரியில் சேர்ப்பதற்காக தந்தை ஏசுராஜூடன் செல்வி மேரி என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதியதில் செல்விமேரியும். ஏசுராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த வழக்கு சிறுவலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ் என்பவர், நகராட்சி அதிகாரிகளுடன் கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மகேந்தி்சிங் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து, 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது கடையில் இருந்த உதாராம் என்பவர் சதீசிடம் தகராறு செய்ததுடன், அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளனர். இது தொடர்பாக சதீஸ் அளித்த புகாரின் பேரில் கொபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த மூன்று வழக்குகளிலும் அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம், பதவி உயர்வு பெற்று தற்போது கீழக்கரையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

அதே போன்று கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் கடந்த 2019ம் ஆண்டு சரக்கு வேன் மோதியதில் சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார்.

தற்போது அவர் ஈரோடு தாலுகா காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அதே போன்று கடந்த 2015ம் ஆண்டு பங்களாபுதூர் அருகே உள்ள பனங்காட்டு பள்ளம் என்ற இடத்தில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் காவல் நிலைய ஆய்வாளர் கதிர்வேல் இருந்தார்.

தற்போது கதிர்வேல் கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். மேற்கண்ட 5 வழக்குகளிலும் சாட்சி விசாரணைக்கு, கீழக்கரை டி.எஸ்.பியாக உள்ள பாலமுரளிசுந்தரம், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் கதிர்வேல், ஈரோடு் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில்,கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 ன் மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி மூன்று பேருக்கும் சாட்சி விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு ஆய்வாளர்கள், ஒரு டி.எஸ்.பி.க்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.