அமாவாசையில் இந்தக் கோவிலுக்குப் போனால் அடுத்த அமாவாசைக்குள் கல்யாணம் நடக்கும்…!

இளம் வயதினர் படிப்பை முடித்து வேலைக்குச் சென்றதும் திருமணம் என்ற இலக்கை அடைந்து விடுகின்றனர். சிலருக்கு உடனே பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமணம் நடந்துவிடுகிறது. சிலருக்கு அது ஜவ்வாக இழு…இழு….என்று இழுத்துக்கொண்டே போகிறது.

அதே போல தான் பெண்களுக்கும் மாப்பிள்ளை கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இவர்கள் என்ன பரிகாரங்கள் செய்தாலும் திருமணம் நடக்கவில்லையே என ஏங்குவர். அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தைப் போக்குகிறார் இந்த கரவீரநாதர். அந்தக் கோவில் எங்குள்ளது? அதன் சிறப்பம்சம் என்ன? எப்படிச் செல்வது என்று இப்போது பார்ப்போம்.

 திருமணத்தடை நீங்க…

வடக்கண்டம் கரவீரம் சிவபெருமான் திருமணத்தடை நீங்க ஒரு அமாவாசையில் வழிபட்டால் அடுத்த அமாவாசைக்குள் திருமணத்தை நடத்திக் கொடுப்பார்.

பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும், சகல விதமான கிரக தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பதும் ஐதீகம்.

திருமணத்தடை நீங்க ஒரு அமாவாசையில் வழிபட்டால் அடுத்த அமாவாசைக்குள் திருமணத்தை நடத்திகொடுக்கும்

திருகரவீரம் என்ற ஊர் தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு கரவீரநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர். இறைவி பெயர்
பிரத்தியட்சமின்னம்மை, பிரத்யக்ஷ நாயகி.

சிவபெருமான் தேவ கன்னியரின் வேண்டுகோளுகிணங்க இங்கு தானே சுயம்பு வடிவில் லிங்கமாக உள்ளார்.
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

Brammapureeswarar
Brammapureeswarar

இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர். ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு. கௌதம முனிவர் தான் இங்கு தல விருட்ஷமாக விளங்க வேண்டும் என்று இறைவனிடம் வரம் கேட்டு பெற்று இங்கு ஜீவ சமாதியாகி உள்ளார். இக்கோவிலில் கௌதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது.

அமாவாசை நாட்களில் பெண்கள் கௌதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகிவிடுகிறது.

கௌதமர் வழிபட்ட தலம்

இந்தத் தலத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. கௌதம முனிவர் இந்தத் தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளார். இது திருக்கண்ண மங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயில். நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தமான அனவரத தீர்த்தம் அமைந்துள்ளது.

Koil entrance
Koil entrance

கோவில் முகப்பு வாயிலை கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்பினை திருமணக் கோல கோவில்கள் என்று கூறுவார்கள்.

தலவிருட்சம்

அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆலயத்தின் தற்போதைய தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது.

Brathiyatcha Minnammani
Brathiyatcha Minnammani

இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும்.

பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார்.

சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார்.

எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும், சகல விதமான க்ரஹ தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பதும் ஐதீகம்.

எப்படி செல்வது?

திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம்.

கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீபக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.

திறக்கும் நேரம்

தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews