காலநிலை மாற்றத்தை விட AI தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தானது: கூகுள் அதிகாரி..!

மனித குலத்திற்கு மிகவும் மோசமான எதிரியாக கருதப்படுவது காலநிலை மாற்றம் என்று உலகம் முழுவதும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது AI தொழில்நுட்பம் அதைவிட மனித குலத்திற்கு மோசமானது என கூகுள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறிய போது காலநிலை மாற்றத்தை விட AI என்ற செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்தார். AI தொழில்நுட்பம் என்பது வேகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் அதிநவீனமாகவும் மாறி வருகிறது என்று கூறிய அவர் சாட்ஜிபிடி மற்றும் பேர்ட் போன்ற தொழில்நுட்பம் மனிதனின் அறிவை மிஞ்சுவிடும் சக்தி வாய்ந்ததாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கவலை கொண்டுள்ள அவர் குறிப்பாக சீன அரசாங்கத்தின் ஒரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார். குடிமக்களை கண்காணிக்கவும், அரசுக்கு எதிரானவர்களை அடக்கவும் சீனாவில் AI பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கங்கள் இதுபோன்ற நோக்கங்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மீண்டும் சர்வாதிகாரம் எதிர்காலத்தில் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

AI தொழில்நுட்பம் பற்றிய அபாயங்களை வரிசையாக பட்டியலிட்ட அவர் இந்த தொழில்நுட்பத்தை அரசாங்கம் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக மாறுவதை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே AI தொழில்நுட்பம் என்பது அணு ஆயுதங்களை விட ஆபத்தானது என எலான் மஸ்க் கூறிய நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் கிட்டத்தட்ட அதே கருத்தை கூறியுள்ளார்.

AI தொழில்நுட்பம் என்பது நன்மைக்கான சக்தி என்று பல நம்புகின்றனர், மேலும் காலநிலை மாற்றம் மற்றும் வறுமை போன்ற மனித குலத்திற்கு எதிரான பிரச்சனையை விட முக்கிய பிரச்சினையாக மாறும் என்று கூறுகின்றனர். ஆனால் அதே காலநிலை மாற்றம், வறுமை போன்றவற்றை தீர்க்கவும் AI பயன்படுத்தப்படலாம் என்றும் ஒரு சிலர் வாதிடுகின்றனர்

AI தொழில்நுட்பம் என்பது தற்போது ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருக்கும் போதே பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் இது இன்னும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பமாக மாறினால் அபாயங்கள் அதிகரிக்க சாத்தியமாக இருக்கிறது என்றும் நன்மை செய்பவர்கள் மட்டுமே இன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்கள் என்பதை உறுதி சொல்ல முடியாது என்றும் தீயவர்களிடம் இந்த தொழில்நுட்பம் சிக்கினால் பல தவறான முன்னுதாரணங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.