ரூ.98 கோடியில் காசிமேட்டிற்கு புது மீன்பிடி துறைமுகம்… எல்.முருகன் அதிரடி அறிவிப்பு!

மீனவர்களின் பாதுகாப்பு நமது பாதுகாப்பு, அதற்காக அரசாங்கம் தனி கவனம் செலுத்தும் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள துறைமுகம் பொறுப்பு கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்றார்.

சென்னை காசிமேட்டில் மீனவர்கள் பைபர் படகுகள் நிறுத்த பல நாட்களாக இடம் கேட்கப்பட்ட வந்துள்ள நிலையில், மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் எல் முருகன், சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு பங்கேற்றனர்.

இந்நிலையில் ஆய்வு கூட்டம் நிறைவுற்றதை அடுத்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார், அதில் 5 துறைமுகங்களை நவீன படுத்துவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார் எனவும், அதற்காகவே சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் நவீன படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்தார்

98 கோடி ரூபாய் செலவில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பல வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்த உள்ளோம் எனவும், குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்ட அனைத்தையும் இங்கே ஏற்படுத்த உள்ளோம் எனவும் அவர் பேசினார்.

இதன் மூலம் பல செலவுகளை குறைக்க முடியும் எனவும், நவீன முறையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ள மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது என்று பேசிய அவர் தமிழகத்தில் இதுபோன்ற மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த உதவிய பிரதமருக்கு நன்றி எனவும் பேசினார்.

அதுமட்டும் இன்றி இந்தியாவில் கடல்பாசி பூங்கா தமிழகத்தில் மட்டும் தான் ஏற்படுத்தப்பட உள்ளது, கடல்பாசி தொழில் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது என பேசிய அவர், இதற்கான இடம் தேர்வு இன்னும் 10 முதல் 15 நாட்களில் முடிய உள்ளது என தெரிவித்தார்.

மீன்பிடி துறையில் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி உள்ளோம், அதற்காக தொழில் முனைவோர் அனைவருக்கும் வேலை அளிக்க 60 சதவீத சப்சிடி உடன் வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தர உள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் காசிமேடு துறைமுகம் 2 மாதத்தில் டெண்டர் விடப்படும்

2015 இல் இருந்து FIDF இன் ஒட்டுமொத்த முதலீடு கட்டுமானதிற்காக 7500 கோடி ஒதுக்கியுள்ளது இந்திய நிதியமைச்சகம், அதில் தமிழகத்திற்கு 1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்க பட்டுள்ளது.

மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவது தான் நமது நோக்கம் எனவும், மீனவர்களின் பாதுகாப்பு நமது பாதுகாப்பு, அதற்காக அரசாங்கம் தனி கவனம் செலுத்தும் எனவும் அவர் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment