இன்னும் சில நாட்களில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் ஆனது சூடு பிடித்து விட்டது என்று கூறலாம்.
தேர்தல் பரப்புரைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் மின்னணு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் சதீஷ்குமார் மின்னணு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 286 வாக்கு பதிவு இயந்திரங்கள் 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.