பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் செம மாஸாக உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
மேலும் இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான விளம்பரங்கள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் மிகவும் ஜோராக நடைபெற்றது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும், ஆந்திராவில் தியேட்டர் கட்டணங்கள் குறைப்பு போன்ற பிரச்சனை காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்பதாலும் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.
ஆனால் படக்குழுவினர் மறு தேதி அறிவிக்காமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் 3 மாத தாமதத்திற்கு பின்னர் ஏப்ரல் மாதம்தான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படமும் இணைந்துள்ளது.