
News
மீண்டும் அவசர நிலை பிரகடனம்! ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள்!!
இலங்கையில் கடந்த ஓரிரு மாதங்களாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்பு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும் கூட தற்போது இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம் நடக்கிறது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்கான பிரதான சாலையை மறித்து மாணவர்கள் 24 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தினர். அதோடு மட்டுமில்லாமல் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு அரசுத்துறை சார்ந்த தொழிலாளர்கள் பெருவாரியாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள் வலுப்பெற்று வருவதை அடுத்து அதிபர் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன போராட்டத்தை ஒடுக்கும் உத்தரவிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
