நாளுக்கு நாள் நம் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஏனென்றால் இந்த கொரோனாவின் பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் முதல் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
அதோடு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகமெங்கும் வேகமாக பரவி வருகின்ற ஒமைக்ரான் பாதிப்பும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் மீண்டும் தங்கள் மாநிலங்களில் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றனர்.
அதன் வரிசையில் டெல்லி மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள் தங்களது வீடுகளிலிருந்து பணியாற்றவும் கூறியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.