விமானத்தில் ஏறும்போது மழையில் நனைந்த பயணி.. நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!

விமானத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததாவும் அந்த படிகளில் மழை நீரை தடுக்க எந்த விதமான தடுப்பும் இல்லாததால் நனைந்து கொண்டே படிகளில் எறியதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என பயணி ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு ரூபாய் 16,000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் தான் விமான நிலையத்தில் மழையில் நனைந்தபடி படி ஏறியதாகவும் அதனால் தனக்கு காய்ச்சல் வந்ததாகவும் கூறி நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் வழக்கு பதிவு செய்தார்.

விமானத்தில் ஏறுவதற்கான படிக்கட்டு ஏணியில் பயணிகளை மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் எந்த விதமான பாதுகாப்பு அம்சமும் இல்லை என்றும் இதனால் மழையில் நனைந்து கொண்டே விமானத்தில் ஏறி ஈரமான உடைகளுடன் பயணம் செய்ததாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டெல்லி சென்றபின் தனக்கு காய்ச்சல் வந்ததாகவும் மூன்று நாட்கள் தான் காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பயணிக்க ரூபாய் 16,000 நஷ்ட ஈடு கொடுக்க கொச்சி விமான நிலையத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது விளக்கம் அளித்த கொச்சின் விமான நிலையத்தின் நிர்வாகம் ’நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் தேவைகளுக்கு இணங்க இந்த புகார் இல்லை என்றும் இந்த புகாரை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆனால் ஏற்கனவே இது குறித்து பல்வேறு முன்னுதாரணங்களை குறிப்பிட்டு பயணிகள் வசதி என்பது முக்கியம் என்றும், பயணியின் புகார் சரியானது தான் என்று நீதிபதிகள் கூறினார்.

பாதிக்கப்பட்ட பயணி தனக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இருந்த நிலையில் அவருக்கு 16 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews