News
பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய போராட்டம் நடத்திய தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி!
தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பினர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பின் தலைவர் கேதிரெட்டி ஜகதீஸ்வரா ரெட்டி தலைமையில் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டத்தில், பத்திரிக்கையாளர் சுவேதா ரெட்டி மற்றும் நடிகை காயத்ரி குப்தா ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய அமைப்பின் தலைவர் கூறுகையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கண்டிப்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் அரசியல் பிரமுகர்கள் முன்வரவேண்டும் என்றும், அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், மத்திய அரசு உடனடியாக இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஆபாசத்தை ஊக்குவித்தல், அநாகரீக, வன்முறை, சட்டவிரோதமாக ஊக்குவித்தல், தார்மீக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர்களை தவறான பாதைக்கு எடுத்துச் செல்லும் விதமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
