குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கழிவறையில் கேட்பரற்று கிடந்த ரூ.38 லட்சத்தி 32 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
பன்னாட்டு விமானமாக சென்னை வந்து உள்நாட்டு விமானமாக செல்லும் விமானங்களை கண்காணித்தனர். அப்போது குவைத்தில் இருந்து பன்னாட்டு விமானமாக வந்து உள்நாட்டு விமானமாக செல்ல இருந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஏறி சோதனை செய்தனர்.
விமான கழிவறையில் கேட்பரற்று கிடந்த பார்சலை பிரித்து பார்த்த போது 8 தங்க கட்டிகள் இருந்தன. ரூ. 38 லட்சத்தி 32 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதை கடத்தி வந்தது யார்? பின்னர் விமான கழிவறையில் மறைத்து வைத்து சென்றது ஏன் என விசாரணை நடத்தி வருகின்றனர்.