எஸ்.பி.பியின் பாடல்களை சிலாகித்து மிக விரிவாக அருமையாக எழுதியுள்ளார் இந்த புத்தகத்தை எழுதியுள்ள கானா பிரபா.
கானா பிரபா அவர்கள் நீண்ட நாட்கள் சினிமா பற்றிய கட்டுரைகளை சுவைபட எழுதி வருபவர்.
இலங்கையை சேர்ந்த இவர் தற்போது ஆஸ்திரேலியா வானொலியில் வேலை செய்து வந்தாலும் சிறு வயதில் தான் பார்த்தது கேட்டது படித்தது என சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் மறக்காதவர்.
இலங்கையில் சிறுவயதில் தான் பார்த்த படங்களையும், அதன் நினைவுகளையும் சுவை குன்றாமல் தனது றேடியோஸ்பதி தளத்திலும் முக நூல், மற்றும் டுவிட்டரிலும் சுவைபட இவர் எழுதியுள்ளார்.
மற்றவர்களின் சினிமா எழுத்துக்களில் இருந்து இவரது சினிமா எழுத்துக்கள் கட்டுரைகள் சற்று மாறுபட்டிருக்கும்.
எஸ்.பி.பி மறைந்த உடன் இவர் இணையத்தில் எழுதிய பாடகன் சங்கதி என்ற கட்டுரையின் தொடர் தொகுப்பை புத்தகமாக வெளியிட இருக்கிறார்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் கேளடி கண்மணி என்ற பாடலில் வரும் பாடகன் சங்கதி என்ற வார்த்தையை இந்நூலின் தலைப்பாக அவர் வைத்துள்ளார்.
ஒரு பாடலையோ அந்த சூழ்நிலையோ எடுத்துக்கொண்டால் அந்த காலத்தில் எப்படி இருந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்றும் இவர் இலங்கையில் பிறந்தவர் ஆதலால் அக்கால போர்ச்சூழ்நிலைகளையும் இலங்கையில் அப்போது இருந்த பரபரப்பான சூழ்நிலைகளையும் அப்பாடல் கேட்ட தருணத்தோடு சேர்த்து விவரிப்பது இவரின் தனிச்சிறப்பு.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புத்தகத்திற்கு முன்பதிவு நடைபெறுகிறது.