பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்

பாண்டிச்சேரி என்றதும் ‘மது’தான் நினைவுக்கு வரும். ஆனால், பாண்டிச்சேரி ஆன்மீகத்திற்கும் பெயர்போனது. ஏராளமான சித்தர்களை தன்வசத்தால் ஈர்த்த புண்ணிய பூமி இது. பாண்டிச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கோவில்கள் இருக்கு, சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள வினாயகர் கோவில் பற்றி பார்ப்போம். இது மிகப்பிரசித்திப்பெற்ற கோவில் ஆகும்.

முன்பு தொண்டை மண்டலத்தின் ஆட்சிக்குட்பட்ட வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் என்ற பெயர்களில் அழைக்கட்டது இந்த பாண்டிச்சேரி. மணல் நிறைந்த குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் மணற் குளத்து வினாயகர் என அழைக்கப்பட்டு இப்ப மணக்குள வினாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோவில் பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரிக்கு வருவதற்கு முன்னரே அதாவது 1666லிருந்து இருகின்றது.

முண்டாசுக்கவிஞன் எனப்போற்றப்படும் பாரதியார் இந்த மணக்குள வினாயகரின் தீவிர பக்தராகும். 1908 முதல் 1918வரை பாண்டிச்சேரியில் தங்கியிருந்த பாரதியார் தினமும் இந்த கோவிலுக்கு வந்து வினாயகரை வணங்கி செல்வாராம். இந்த வினாயகரை போற்றும்விதமாக ‘நான்மணிமாலை’ என்ற தலைப்பில் 40பாடல்கள் பாடி இருக்கிறார்.. பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

பாரதியாரை மட்டும் தன்பால் ஈர்க்கவில்லை இந்த வினாயகர். 50க்கும் மேற்பட்ட சித்தர்களையும் ஈர்த்திருக்கிறார். அவர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு இங்கேயே தங்கி அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்தப்பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.

கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக – ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங்களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபங்கொண்ட அந்தப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் ‘மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் விநாயகர் சிலை போடப்பட்டது. மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள்மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்து ஆட்களை விசாரித்தார். தாங்கள் கடலில் சிலையை போட்டது உண்மை என சத்தியம் செய்தனர். மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் பின்னிரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன்னிரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன. மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப்புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உற்சவ மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உற்சவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இக்கோவிலுக்கென தங்கத்தேர், வெள்ளித்தேர் உண்டு. முக்கியமான தினங்களில் இத்தேர்களில் அமர்ந்தபடி வினாயகரின் திருவீதி உலா நடக்கும்.

உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் அண்ட மாநில பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் இந்த வினாயகரை வணங்கி செல்கின்றனர். ஜாதி, மத, இன, நாடு பேதமின்றி அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வினாயகருக்கு தினமும் நான்கு கால பூஜை செய்விக்கப்படுகின்றது. மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் ஆகியோர் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர். மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்தும் பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடுமையான கோடைக்காலத்திலும் இதில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

பொதுவாக கோவிலில் பள்ளியறை இருக்கும். இரவு பூஜை முடிந்ததும், இறைவன், இறைவியின் உற்சவர் சிலைகளை பள்ளியறையில் வைத்துவிட்டு பள்ளியறை பூஜை செய்தப்பின் ஆலயத்தை பூட்டிவிடுவது வழக்கம், ஆனால் இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.

99a6b97dd7977d53411aa2efb94b7472

விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இக்கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது . அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லாது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது . லட்சுமி யானை புதுவை மக்களால் பேரன்புடன் கொண்டாடப்படுது.

கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான விசயக். அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.

வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து வினாயகரை அழகுபடுத்தி இருக்கிறார்கள். . இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளி, தங்கத்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

இக்கோவில் காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4மணி முதல் இரவ 10 மணி வரை கோவில் திறந்திருக்கும். சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு.

வினாயகரை வணங்கி நற்பலன் பெறுவோம்!!




புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews