ஒசூர் அருகே மலை கிராமத்தில் 200 பழங்குடியின கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டை கிராமத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கெலமங்கலம் வட்டார மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அப்போது 200க்கும் மேற்பட்ட மலைக்கிராம பழங்குடியின கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம் குங்குமம் பூசி, அவர்களுக்கு மாலைகள் மற்றும் கைகளில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மருத்துவத் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்