ஆடி மாசம் முடிஞ்சதால கால்யண வயசுல இருக்குற எல்லாரும் அடுத்தடுத்து கால்யாணம் முடிச்சிட்டு இருக்காங்க. ஏன்னா இன்னொரு லாக்டவுன் வந்துட்டா என்ன பண்றதுங்குற பயம் தான். அதனால இப்போ கல்யாண சீசன் மாதிரி தினமும் ஒரு கல்யாணம் நடந்திட்டு இருக்கு. இப்போ எதுக்கு இந்த விளக்கம்னு தான நினைக்கறீங்க.
பொதுவா நாம கல்யாணத்துல மிச்சமாகிட்ட உணவுகளை எல்லாம் என்ன பண்ணுவோம். அக்கம் பக்கத்து வீடுகள்லயும் சொந்தக்காரங்க கிட்டயும் பங்கு வச்சு கொடுத்திடுவோம் இல்லையா. ஆனா தனது சகோதரன் திருமணத்தில மிச்சமான உணவுகளை ஏழைகளுக்கு வழங்கி மகிழ்வித்துள்ளார் ஒரு பெண்மணி.
நம்ம ஊர்ல இல்லைங்க மேற்கு வங்க மாநிலத்தில தான் இந்த சம்பவம் நடந்திருக்கு. சமீபத்தில அங்க நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர்கள் உண்டது போக எஞ்சிய உணவுகளை தன் கையாலே உணவுக்காக ஏங்கி நிற்கும் மக்களுக்கு வழங்கியுள்ளார் மணமகனின் சகோதரி பாபியா கர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருந்த ஆதரவற்றோர்களுக்கு திருமண விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் பாபியா.
இந்த சம்பவத்தை தற்செயலாக கவனித்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண புகைப்படக் கலைஞர், பாபியாவின் செயலை தனது கேமரா லென்ஸ் வழியாக படம் பிடித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
தெரிந்தே உணவுகளை வேஸ்ட் செய்து வரும் மக்கள் மத்தியில் இவர்களும் பசியாறட்டும் என வறியவர்களுக்கு வழங்கிய அந்த மனசு தான் சார் கடவுள் என்று பலரும் பாபியாவை பாராட்டி வருகிறார்கள்.