அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5


0c6ba90905dd0cf357369f5ccfdc9707

பாடல்…

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

 

பொருள்

தோழி: நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காணமுடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல… இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப்பெண்கள்.

விளக்கம்:

கடவுளா?! அவரை எனக்குத் தெரியாதா?!  அவரைத்தான் தினமும் பார்க்கிறோமே!  தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன!? தினமும் தரிசிக்கும்  அவரிடம் கண்டு ரசிக்க புதிதாய் என்ன இருக்கிறது?! வருஷந்தோறும் வருகிற மார்கழிதானே?! தினமும் வரும் காலைப்பொழுதுதானே?! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன?! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல்தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், ஆனானப்பட்ட விஷ்ணுவும் பிரம்மனால்கூட இறைவனின் அடிமுடியை காணமுடியாமல் போகையில் அற்பமானிடப்பிறவியான நாம் அவனை முழுதுமாய் பார்த்துவிட முடியுமா என திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையாரின் சிறப்பை எடுத்துச்சொல்கிறார்கள் சக தோழியர்கள். இந்த பாடல் திருவண்ணாமலையில் பாடப்பட்டதாகும்..

 

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.