உதகை அருகே திருமண வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்த கரடியால் பரபரப்பு. கல்யாண வீட்டில் இருந்த பலகாரம், காப்பியை குடித்த வீடியோ சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
உதகை அருகே இத்தலார் கிராமத்தில் நீலகிரி மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் அட்டாரி நஞ்சனின் வீடு உள்ளது. அரது பேரன் பவிஷிற்கு உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு திருமணத்திற்காக மணமகன் வீட்டார் அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு வந்த நிலையில் வனபகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு உணவு தேடி கரடி ஒன்று வந்தது. பின்னர் அழையா விருந்தாளியை போல மணமகன் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர், இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டும் காபியை குடித்தது.
அதனை கண்ட வளர்ப்பு நாய் நீண்ட நேரமாக குறைத்தது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது கரடி வீட்டுக்குள் நுழைந்து உணவு பொருட்களை சூறையாடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அந்த கரடி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியது. திருமண நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்த அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.