பாபநாசம் அருகே பசுபதி கோவிலில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவிக்கு ,மாணவி வீட்டருகே வசிக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் பள்ளி முதல் தளத்திலிருந்து மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதில் இவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்படவே உடனடியாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி அளித்த புகாரினை தொடர்ந்து மாணவி வீட்டருகே வசிக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் கண்ணன் (45) என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொத்தனார் கொடுத்த பாலியல் தொல்லை தாங்காமல் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பாபநாசம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.