News
தொடர் மழையால் காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.
மொத்தமாக 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
