தேர்வு நெருங்குகிறது-4

குறைவாக எழுதி அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

விடைத்தாளில் பக்கம் பக்கமாக எழுதினால் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மறந்து விடுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அதிலேயே 100 வார்த்தைகளுக்குள் விடையளி, 200 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளி, சுருக்கமான விடையளி என விடையளிக்க வேண்டிய முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நீங்கள் எழுதினாலே போதுமானது.

எடுத்துக்காட்டாக 2 மார்க் வினாக்களுக்கு மூன்று முதல் 5 வரிகள் மிகாமலும், 5மார்க் வினாக்களுக்கு 10-12 வரிகளும், 10 மார்க் வினாக்களுக்கு 1 பக்கமும் எழுதினால் போதுமானது.

ஒருவேளை மிக விரிவாக விடையளிக்க வேண்டிய வினா கேட்கப்பட்டு இருந்தால் கூட அதைவிட குறைவாக விடையளிக்க வினாவை (சாய்ஸ்- அல்லது) தேர்ந்தெடுத்து விடையளியுங்கள். இது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

பத்திபத்தியாக எழுதுவதை தவிர்த்து பாயிண்ட்-பாயிண்ட்களாக எழுதுங்கள். இது திருத்துபவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

குறைந்த பாடங்களை மட்டுமே படித்து நல்ல மதிப்பெண் பெறுவது எப்படி?

முந்தய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விதாள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவற்றில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை நன்றாக அவதானித்து அவை இடம்பெற்ற குறிப்பிட்ட சில பாடங்களை கவனமாக படிக்கவும். பொதுவாக எல்லாப்பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது. சில குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே அடிக்கடி கேள்விகள் கேட்கப்படும். அவற்றை மட்டும் நன்றாக படித்து வைத்துக்கொண்டால் போதுமானது.

தேர்வின் போது பின்பற்ற வேண்டியவை

1. எழுதுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. முக்கியமான வார்த்தைகளில் அடிக்கோடு இடவும்.

3. ஒருவேளை மறந்து விட்டால் அந்த விடையை யோசித்துக் கொண்டே இருப்பதை நிறுத்தி விட்டு அடுத்த வினாவுக்கு விடையளிக்க துவங்கவும். எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டு பிறகு எழுதிக்கொள்ளலாம்.

4. கையெழுத்து ஒரே சீராக சரியான இடைவெளி விட்டு இருக்கும்படி எழுதவும்.

5. எழுதி முடித்த பிறகு ஒருமுறை அனைத்தையும் சரிபார்க்கவும்.

6. எழுதிமுடித்துவிட்டு வெளியில் வந்து எழுதிய விடைகளைக் குறித்து யாரிடமும் ஆலோசனை செய்ய வேண்டாம். அடுத்த தேர்வுக்கு படிப்பது குறித்து கவனம் செலுத்தவும்.

தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews