ஒரே வகுப்பறையில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் கணிதத்தில் தோல்வி: அதிர்ச்சி தகவல்..!

உதகையில் ஒரே வகுப்பில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த 34 மாணவர்களும் கணித பாடத்தில் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியான நிலையில் அந்த தேர்வு எழுதிய 94 சதவீதத்திற்கும் அதிகமான ஒரு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 43,000 மாணவ மாணவிகள் இந்த தேர்வில் தோல்வியடைந்தனர். இந்த நிலையில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகள் துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை தேர்வுக்கான விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு அட்டவணையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் கணித பாடத்தில் தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 27ஆம் தேதி உதகை அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு 34 மாணவர்கள் எழுதியதாகவும் அந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு உதவியதாகவும் புகார் வந்தது.

இந்த குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து கண்காணிப்பாளர்கள் ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் 34 மாணவர்களும் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews