ஆந்திர மாநிலத்தில் 18 மாத குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறியதால் அந்த குழந்தை கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் 18 மாத குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் என சுற்றி வளைத்த தெரு நாய்கள் அந்த சிறுமியை கடித்து குதறின. இதனையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய பெற்றோர்கள் உடனடியாக விரைந்து வந்து தெருநாய்களை விரட்டி குழந்தையை மீட்டனர். உடனடியாக அந்த குழந்தையை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த குழந்தை இறந்துவிட்டது.
இறந்த குழந்தைக்கு 18 மாதமே ஆகிறது என்றும் அந்த குழந்தை பெயர் சாத்விகா என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது குழந்தை சாத்விகா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அந்த பகுதிக்குள் நுழைந்து அந்த சிறுமியை தாக்கியது. உடனே அதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சுமார் ஒரு டஜன் நாய்கள் சிறுமியை கடித்து குதறியதாகவும் இதனை அடுத்து அந்த சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
தெருநாய்கள் கடித்து உயிர்ப்பலியாவது முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே பல சம்பவங்கள் இது போல் நடந்துள்ளன என்பது ஒரு சில உயிர்கள் பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தெரு நாய்களை வளர்ப்பவர்களுக்கு சில வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதும் தெருநாய்களால் விபரீதம் ஏற்பட்டால் அந்த நாய்களை வளர்ப்பவர்கள் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில மாதங்களில் நாய் கடிக்கான மருந்துகள் மட்டும் கோடிக்கணக்கில் விற்பனை ஆகி உள்ளதாகவும் இதில் ஒரு மருத்துவ சதியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது விசாரணையில் தான் தெரியவரும். இந்த நிலையில் இனிமேலும் தெருநாய்களால் ஒரு உயிர் கூட போகாத வகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.